TA/Prabhupada 0315 - நாம் பிடிவாதம் கொண்டவர்கள், மீண்டும் மீண்டும் கிருஷ்ணரை மறக்க முயற்சி செய்கிறோம்



City Hall Lecture -- Durban, October 7, 1975


நண்பர்களே தாய்மார்களே, இந்த இயக்கத்தில் பங்கேற்பதற்காக நான் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இயக்கம் நான் தொடங்கி வைத்து இல்லை. இது பல பல ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணராலையே தொடங்கப்பட்டது. முதல்முதலாக அவர் இந்த பகவத்-கீதையின் தத்துவத்தை சூரிய பகவானிடம் கூறினார். பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தில்


இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத் (பகவத்-கீதை 4.1)


ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது (பகவத்-கீதை 4.2)


மனுவின் வயது சுமார் நாலு கோடி வருடங்கள் எனக் கணக்கிட்டலாம். ஆக கிருஷ்ணர் குறைந்தது நாலு கோடி வருடங்களுக்கு முன்பு இதை போதித்திருப்பார். அவர் பகவத்-கீதையின்‌ தத்துவத்தை சூரிய பகவான் அதாவது விவஸ்வானுக்கு போதித்தார். சூரிய கிரகத்தின் பிரதான தெய்வத்தின் பெயர் விவஸ்வான். அவர் மகன், மனு, வைவஸ்வத மனு... அவர் மகன், இக்ஷ்வாகு, சூரிய வம்சத்தின் தலைவர் ஆவார். அதே வம்சத்தில் தான் பகவான் ராமச்சந்திரர் தோன்றினார், இக்ஷ்வாகுவின்... இப்படியாக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் பழமையானது. ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார்


ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது (பகவத்-கீதை 4.2)


முன்னர், ராஜரிஷிகள், குரு பரம்பரையில் இந்த அறிவுரையை பெற்றிருந்தார்கள். அது தான் பகவத்-கீதையைப் புரிந்துகொள்ளும் முறையாக இருந்தது. ஆனால் கிருஷ்ணர் கூறுகிறார், ஸ காலேனேஹ யோகோ நஷ்டோ பரந்தப. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணர், குருக்ஷேத்திர போர் களத்தில், அர்ஜுனனிடம் பேசும்போழுது, அர்ஜுனன், சண்டை போடவேண்டுமா ,வேண்டாமா என்று குழம்பிப் போனான். பிறகு அவனை போரிட செய்வதற்காகவே, அவர் அர்ஜுனனுக்கு இந்த பகவத்-கீதையை, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போதித்தார். மற்றும் அவர் இங்கு கூறுகிறார், "இப்பொழுது அந்த குரு சிஷ்ய பரம்பரையில் தொடர்ச்சி உடைந்து விட்டது; ஆகையால் நான் உனக்கு மீண்டும் போதிக்கிறேன், அதனால் மக்கள் உன்னிடமிருந்து இந்த கிருஷ்ண பக்தி தத்துவத்தின் பொருளை கற்றுக்கொள்ளலாம்."ஆக ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த தத்துவம் அர்ஜுனனுக்கு போதிக்கப்பட்டது, அதனால் நம்மிடம் அந்த அறிவுரை இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அது மீண்டும் சிதைக்கப்படுகிறது. ஏனென்றால் பரம்பரையின் வழியாக இந்த கல்வியை ஏற்காததால், நாம் நமக்கு தகுந்தபடி ஊகிக்கிறோம், அதனால் அது மீண்டும் சிதைக்கப்படுகிறது. ஆகையால் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு, ஒரு பக்தராக இந்த பகவத்-கீதையை போதித்தார். ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு, கிருஷ்ணரின் அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ணர், பரம புருஷரான முழுமுதற் கடவுள், ஒரு ஆணை இடும் எஜமானாக அறிவுறுத்தினார்


ஸர்வ–தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத்-கீதை 18.66)


இருப்பினும் மக்கள் தவறாக புரிந்துக் கொண்டார்கள். ஆகையால் இந்த முறை, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் சைதன்ய மஹாப்ரபு, கிருஷ்ணரே, கிருஷ்ணரின் பக்தராக தோன்றினார். ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு கிருஷ்ணரே தான். அது அங்கிகாரம் பெற்ற சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது


க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம் யக்ஞைர் ஸங்கீர்த்தனை: ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ (பகவத்-கீதை 18.66)


ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் வாஸ்தவத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் இயக்கம். மற்றும் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு கிருஷ்ணரே தான். ஆக கிருஷ்ணர் கட்டுண்ட ஆன்மாவின் மேல் கருணை‌ உடையவர். அவர் அவர்களை கிருஷ்ண உணர்வின் உண்மையான நிலைக்கு உயர்த்த மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார். ஆனால் நாம் பிடிவாதம் கொண்டவர்கள். நாம் மீண்டும் மீண்டும் கிருஷ்ணரை மறக்க முயற்சி செய்கிறோம். இது நடந்து கொண்டிருக்கிறது.