TA/Prabhupada 0395 - பரம கருணா பொருள்விளக்கம்



Purport to Parama Koruna -- Los Angeles, January 16, 1969

பரம கொருணா, பஹு துய் ஜன, நிதாய் கௌரசந்திர. இது லோசன தாச தாக்குரால் பாடப்பட்ட ஒரு பாடல். அவர் பகவான் சைதன்யரின் ஒரு மிகப்பெரிய பக்தரும், கிட்டத்தட்ட சமகாலத்தினரும் ஆவார். அவர், பகவான் சைதன்யரின் லீலைகளை வர்ணித்து, சைதன்ய-மங்கள என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். இது புகழ்பெற்ற ஒரு புத்தகம், சைதன்ய-மங்களம். மேலும் அவர் பல பாடல்களை எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட எல்லா வைஷ்ணவர்களும் கவித்துவம் வாய்ந்தவர்கள். வைஷ்ணவர்களின் இருபத்தி ஆறு குணங்களில் அதுவும் ஒன்று. ஆக அவர் கூறுகிறார், "இந்த இரண்டு பிரபுக்களும்," நிதாய் கௌரசந்திரர், "நித்யானந்த பிரபு மற்றும் கௌராங்க மஹாபிரபு, அதாவது பகவான் சைதன்யர், இவர்கள் கருணை மிக்க அவதாரங்கள்." ஸப அவதார-ஸார ஷிரோமணி. "அவர்கள், அனைத்து அவதாரங்களின் மையப் பொருளானவர்கள்." இந்த அவதாரம் பகவத்-கீதையில் குறிக்கப்பட்டிருக்கிறது, அதாவது வேத விதிகளை செயலாற்றுவதில் முரண்பாடுகள் ஏற்படும்போது, தெய்வபக்தியற்ற செயல்கள் பிரபலமாக இருக்கும்போது, பகவான் அவதரிக்கிறார், அதாவது இந்த ஜட உலகில் இறங்கி வருகின்றார். பணிந்தோரை காத்து பணியாத அதர்மக்காரர்களை அழிப்பதற்காக அவதரிக்கிறார். அவதாரங்களின் நோக்கம் அதுதான். ஒவ்வொரு அவதாரத்திலும் இந்த இரண்டு விஷயங்களை நம்மால் பார்க்கமுடியும். கிருஷ்ண பகவான் மிகவும் அழகானவர், கருணையுடையவர் ஆனால் அதே சமயம் அசுரர்களுக்கு மிகவும் பயங்கரமானவர். அசுரர்களுக்கு அவர் வஜ்ராயுதத்தை போல் தோன்றுகிறார், மற்றும் கோபியர்கள் அவரை அழகு மிக்க காமதேவராக பார்த்தார்கள். ஆக பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது, யே யதா மாம் ப்ரபத்யந்தே (பகவத்-கீதை 4.11). அசுர குணங்களிலிருந்து எந்த அளவுக்கு ஒருவன் விடுபடுகிறானோ அதே அளவுக்கு தான் அவனால் கடவுளை உணரமுடியும். ஆக இந்த யுகத்தில்... இருந்தாலும் கடைசி அவதாரமான, கல்கி அவதாரத்தில் வெறும் படுகொலை தான். நீண்ட காலத்திற்கு பிறகு அவர் அவதரிப்பார். ஆனால் இங்கு, பகவான் சைதன்யரின் நோக்கம் கொலை அல்ல, வெறும் கருணை தான். அதுதான் பகவான் சைதன்யரின் சிறப்பியல்பு. ஏனென்றால் இந்த யுகத்தில் அதர்மம் பிரபலமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சைதன்ய பகவான் அவர்களை கொல்ல நினைத்திருந்தால், அவர்கள் விமோசனம் அடைவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அவர்கள்... அவதாரத்தால் வதம் செய்யப்பட்ட யாரும் விமோசனம் அடைவார் என்பதும் உண்மை தான். ஆனால் அவர்கள் ஆன்மீக லொகத்திற்கு செல்லமாட்டார்கள். அவர்கள் அருவவாதிகள் ஆசைப்படி பிரம்மஜோதியில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள். வெறு விதமாக சொன்னால், அருவவாதிகளின் விமோசனம் எனும் இலக்கு, பகவானின் எதிரிகளின் விமோசன இலட்சியத்திற்கு சமமாகும். அது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. ஆக, பகவான் சைதன்யர் கருணை மிக்கவர், ஏனென்றால் அவர் அனைவரையும் அணைத்து கிருஷ்ணரின்மீதான அன்பை வழங்குகிறார். ரூப கோஸ்வாமி, பகவான் சைதன்யரை உதாரகுணம் மிக்கவர் என விவரித்திருக்கிறார் ஏனென்றால் அவர் அனைவருக்கும், எந்த தகுதி கருதலும் இல்லாமல் கிருஷ்ணரை வழங்குகிறார். எனவே லோசன தாச தாக்குர் கூறுகிறார், பரம கொருணா பஹு துய் ஜன, நிதாய் கௌரசந்திர. மேலும் அவர்கள் அனைத்து அவதாரங்களின் சாராம்சமாக விளங்குகிறார்கள். கேவல ஆனந்த-கந்த. அவர்களின் பிரசார முறையும் மிகவும் இனிமையானது. சைதன்ய மகாபிரபு பரிந்துரைக்கிறார், "ஹரே கிருஷ்ண ஜெபித்து உற்சாகத்துடன் ஆடுங்கள், பிறகு களைப்பாக இருந்தால், சற்று ஓய்வெடுத்து கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடுங்கள்." ஆக அவரது வழிமுறை மிகவும் இனிமையானது. கேவல ஆனந்த-கந்த. அவர் ஜகன்னாத புரியில் இருந்தபோது, தினமும் மாலையில் திருநாம ஜெபத்துடன் அனைவரும் ஆடினார்கள். பிறகு, அவர் ஜகன்னாதரின் பிரசாதத்தை தாராளமாக விநியோகம் செய்தார். தினமும் இரவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஆக இது ஒரு தைவீகமான இனிமையூட்டும் இயக்கம். கேவல ஆனந்த-கந்த. பிறகு அவர் பரிந்துரைக்கிறார், பஜோ பஜோ பாய், சைதன்ய நிதாய். "என் அருமை சகோதரனே, இந்த இருவரை, பகவான் சைதன்யர் மட்டும் நித்யானந்தரை வழிபட முயற்சி செய்." ஸுத்ருட விஷ்வாஸ கொரி, "நம்பிக்கை மற்றும் தீர்மானத்துடன்.." பகவான் சைதன்யரின் சொற்களில் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். பகவான் சைதன்யர் கூறுகிறார், "தொடர்ந்து திருநாமத்தை உச்சரிப்பாயாக. இத்தகைய ஜெபத்தினாலே ஒருவரால் வாழ்வின் பூரணமான பக்குவத்தை அடைய முடியும். இது உண்மை. நாம் திருநாம ஜெபத்தை ஏற்றால் ஒழிய, நம்மால் அதை உணரமுடியாது. ஆனால் திருநாமத்தை ஜெபிப்பவர்களால், வாழ்க்கையில் தேவையான எல்லா பூரணத்துவமும் அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை வெகு சீக்கிரமாக உணரமுடிகிறது. ஆக நாம் இந்த மந்திரத்தை நம்பிக்கை மற்றும் உறுதியுடன் ஜெபிக்கவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் தேவையான ஒரே தகுதி என்னவென்றால், அவர் கூறுகிறார், விஷய சாடியா, ஸெ ரஸே மாஜியா, முகே போலோ ஹரி ஹரி. நாம் நம்பிக்கை மற்றும் தீர்மானத்துடன் ஜெபிக்க வேண்டியது தான், ஆனால் அதே சமயம் நாம் கவனமாக இருக்க வேண்டியது என்னவென்றால், புலன் இன்ப ஆசையிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விஷய சாடியா, விஷய என்றால் புலனுகர்ச்சி. மற்றும் சாடியா என்றால் கைவிடவேண்டும். புலனுகர்ச்சியை கைவிடவேண்டும். இந்த பௌதிக வாழ்க்கையில் நமக்கு புலன்கள் இருக்கின்றன மற்றும் அவையை நாம் பயன்படுத்தி பழக்கப்பட்டுள்ளோம் என்பது வாஸ்தவம் தான். அதை நம்மால் நிறுத்த முடியாது. ஆனால் இங்கு கேள்வி, அதை எப்படி நிறுத்தவேண்டும் என்பதில்லை, எப்படி ஒழுக்கப் படுத்தவேண்டும் என்பது தான். உதாரணமாக உண்பது நமக்கு தேவையானது தான். விஷய என்றால் உண்பது, உறங்குவது, உடலுறவு மற்றும் தற்காப்பு. இந்த விஷயங்கள் முற்றிலும் தடைப்படுத்தப்பட்டவை அல்ல. ஆனால் இவைகள், நாம் கிருஷ்ண பக்தியில் செயலாற்றுவதற்கு சாதகமாக இருக்குமாறு, ஒழுக்கப்படுத்தப் பட்டுள்ளன. எனவே நாம் ஏற்கக்கூடாது... உண்பதை எடுத்துக்கொள்ளுங்கள். வெறும் நாக்கை திருப்தி படுத்துவதற்காக சாப்பிடக்கூடாது. கிருஷ்ண பக்தியை செயலாற்றுவதற்காக, தம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே சாப்பிட வேண்டும். ஆக உண்பது நிறுத்தப்படுவதில்லை, ஆனால் சாதகமாக இருக்கும் வகையில் ஒழுக்கப்படுத்தப்படுகிறது. அதுபோலவே உடலுறவு. உடலுறவும் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் கட்டுப்பாட்டுக் கொள்கை என்னவென்றால், திருமணம் செய்த பிறகு, கிருஷ்ண பக்தியுள்ள குழந்தைகளாக பெற்று வளர்ப்பதற்காக மட்டுமே உடலுறவு கொள்ளவேண்டும். அப்படி இல்லாவிட்டால் செய்யக்கூடாது. ஆக எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்காப்பையும் நிறுத்துவதற்கான கேள்வியே இல்லை. கிருஷ்ணரின் ஆணைப்படி அர்ஜுனரும் போரிட்டார், பாதுகாத்தார். ஆக எல்லாம் இருக்கிறது. எதுவும் நிறுத்தப்படுவதில்லை. நம் கிருஷ்ண பக்தியை நாம் செயலாற்றுவதற்காக வெறும் ஒழுக்கப்படுத்தப்படுகிறது. விஷய சாடியா. இந்த விஷய எனும் நான்கு உடல் ரீதியான ஏக்கங்களை, அதாவது உண்ணுதல், உறங்குதல், உடலுறவு மற்றும் தற்காப்பு, இவையை புலன் இன்பம் பெறுவதற்காக ஏற்கக்கூடாது. கூடாது. அரசியல்வாதிகள் புலன்களை திருப்திபடுத்துவதற்காக போராடுகிறார்கள். மக்கள் நலனை அவர்கள் கருதுவதில்லை. அரசியலில் இருக்கும் பேராசையினால் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அத்தகைய போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களைப் பாதுகாப்பதற்காக எப்பொழுது போராட்டம் தேவையோ, அந்தப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆக நாம் இந்த புலன் இன்பத்திற்காக செயல்படுவதை கைவிடவேண்டும். தேகோ தேகோ பாய் த்ரி-புவனே நாய். பிறகு அவர் கூறுகிறார், "இதோ பாருங்கள், இவ்வளவு கருணையுடைவராக வேறு யாரும் இல்லை." பஷு பகி ஜுரே, பாஷண விதரே. அவர் கருணையால் பறவைகளும். மிருகங்களும் கூட பராமரிக்கப்பட்டுகின்றனர். உண்மையில், சைதன்ய மகாபிரபு, மத்திய இந்தியாவில் உள்ள ஜாரிகண்டம் எனும் காட்டிலிருந்து செல்லும் பொழுது; அவருடன் வெறும் அவர் சேவகர் மட்டும் தான் இருந்தார், மற்றபடி அவர் தனியாக தான் பிரயாணம் செய்திருந்தார்; அவர் ஒரு புலியின் மேல் தனது கையை வைத்தார். உறக்கத்தில் இருந்த புலி கர்ஜித்தது. "நம் கதை முடிந்தது." என சைதன்ய மகாபிரபுவின் சேவகர் நினைத்தார். ஆனால் சைதன்ய மஹாபிரபு அந்த புலியிடம் கேட்டார், "எதற்காக நீ தூங்குகிறாய்?" எழுந்து நில். ஹரே கிருஷ்ண எனும் திருநாமத்தை ஜெபி." உடனேயே அந்த புலி ஆட ஆரம்பித்தது. இது உண்மையான சம்பவம். சைதன்ய மஹாபிரபு இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தை பிரசாரம் செய்தபோது, புலிகள், மான்கள்,... அனைவரும் பங்கேற்றனர். நாம் அவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் அல்ல என்பதும் வாஸ்தவம் தான். அதுவும் சாத்தியம் தான்,... குறைந்தபட்சம், நாய்கள் சங்கீர்த்தனத்தில் ஆடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆக அதுவும் சாத்தியம் தான்... ஆனால் அப்படி ஒரு ஆபத்தான காரியத்தை செய்ய நாம் முயலவேண்டாம். சைதன்ய மஹாபிரபுவால் புலிகளுக்கும் ஆடுவதற்காக ஊக்கமூட்ட முடிந்தது. நம்மால் குறைந்தபட்சம் மனிதர்களுக்கு ஆட ஊக்கமூட்ட முடியும் தானே. இது மிகவும் இனிமையான ஒரு இயக்கம். ஆக பஷு பக்கி ஜுரே, பாஷண விதரே. பாஷண என்றால் கல். ஒரு கல்நெஞ்சம் படைத்தவனின் உள்ளமும் ஹரே கிருஷ்ண ஜெபத்தால் உருகும். நாம் அதை அனுபவித்திருக்கிறோம். பாஷாண விதரே, ஷுனி ஜார குண-காதா. பகவான் சைதன்யரின் தைவீக லீலைகள் மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கேட்பதாலே, கல்நெஞ்சக்காரர்களின் உள்ளமும் உருகியது. அப்படி பல சம்பவங்கள் உள்ளன, ஜகாய் மாதாய். இப்படி, தாழ்வடைந்த பல ஜீவன்கள், உன்னதமான ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பிறகு லோசன தாச தாக்குர் கூறுகிறார், விஷய மாஜியா, ரொஹிலி பொரியா. "துரதிர்ஷ்டவசமாக நான் இந்த உடல் ரீதியான, அதாவது புலன்களின் ஏக்கங்களுக்கு அடிமையாகி விட்டேன். அதனால் நான் சைதன்ய மஹாபிரபுவின் திருவடிகளை மறந்துவிட்டேன்." விஷய மாஜியா, ரொஹிலி பொரியா, ஸெ பதே நாஹிலோ ஆஷ. "பகவான் சைதன்யரின் தாமரை பாதங்களை நேசிப்பதற்கான ஆசை என் உள்ளத்தில் ஏற்படவில்லை." ஏன் அப்படி? அவர் வருத்தப்படுகிறார், ஆபன கரம புஞ்ஜாயெ ஷமன, அதாவது "கடந்தகாலத்தில் நான் செய்த பாவங்களின் விளைவாக நான் துன்பப்படுகின்றேன். என்னுள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்காக எந்த ஆசையும் ஏற்படவில்லை. இது, இறப்பின் கண்காணிப்பாளரான யமராஜர், எனக்கு வழங்கிய தண்டனை." வாஸ்தவத்தில் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது மிகவும் சிறப்பானது, இனிமையானது. ஒரு சூதறியாத எளிமையானவனுக்கு இதற்காக ஈர்ப்பு ஏற்படுவது இய்ல்பானது. ஆனால் ஒருவனுக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை என்றால், அவன் இறப்பின் கண்காணிப்பாளரின் சட்டத்தால் தண்டிக்கப்படவன் என புரிந்துகொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும், நாம் இந்த திருநாம உச்சாடனம் எனும் கொள்கையை பின்பற்றினால், இறப்பின் கண்காணிப்பாளரான யமராஜரும் தண்டிக்க மறுப்பார். அதுதான் பிரம்ம-ஸம்ஹிதாவின் தீர்மானம். பிரம்ம-ஸம்ஹிதையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், யாரொருவன் பக்திமயமான வாழ்க்கையை வாழ்கிறானோ, கடந்த காலத்தில் செய்த பாவங்களின் எதிர்வினைகள் உடனடியாக சரிகட்டப்படுகின்றன. ஆக நம்மில் ஒவ்வொருவரும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில், ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என ஜெபித்து பங்கேற்க வேண்டும்.