TA/Prabhupada 0217 - தேவஹூதியின் நிலைமை ஒரு சிறந்த பெண்ணினுடையது



Lecture on SB 3.28.1 -- Honolulu, June 1, 1975

ஆக இந்த இளவரசி, அதாவது மனுவின் மகள், கதர்ம முனிக்குச் சேவை செய்யத் தொடங்கினாள். மேலும் அவர்களிருந்தது குடிசையால் செய்யப்பட்ட ஆஸ்ரமம் ஆகும். அங்கு நல்ல உணவோ, வேலையாட்களோ எதுவும் கிடையாது. அழகாகவும் அரசனின் மகளாகவும் இருந்த அவள், படிப்படியாக உடல் மெலிந்து ஒல்லியானவளாக ஆனாள். எனவே கதர்ம முனி எண்ணினார் "அவள் தந்தை என்னிடம் அவளை ஒப்படைத்தார். ஆனால் அவளின் ஆரோக்கியமும் அழகும் குன்றிக் கொண்டே வருகிறது. எனவே அவளது கணவன் என்ற முறையில் நான் அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று. எனவே தன் யோக சக்தியின் மூலம் அவர் ஒரு பெரிய விமான நகரத்தை உருவாக்கினார். அது தான் யோக சக்தி. 747 அல்ல. (சிரிப்பு) அது ஒரு மிகப் பெரிய நகரம், அங்கு ஏரி இருந்தது, தோட்டம் இருந்தது, வேலைக்காரி இருந்தாள். பெரிய, பெரிய அரண்மனைகள் இருந்தன. மேலும் இவை அனைத்தும் வானத்தில் மிதந்து கொண்டிருந்தன. அவர் பல்வேறு கிரகங்களையும் அவளுக்குக் காண்பித்தார். இவ்வாறாக நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஒரு யோகி என்ற முறையில் அவளை அனைத்து வகையிலும் திருப்திப்படுத்தினார். பிறகு அவள் குழந்தைகள் வேண்டும் என்று விரும்பினாள். எனவே கதர்ம முனி ஒன்பது மகள்கள் மற்றும் ஒரு மகனை அவள் ஈன்றெடுக்க அருளினார். "உனக்குக் குழந்தைகள் பிறந்தவுடனே, நான் உன்னைப் பிரிந்து சென்று விடுவேன்." என்று முன்னரே தீர்மானித்தபடி அவர் கிளம்பினார். இதை அவளும் ஏற்றுக்கொண்டாள். எனவே குழந்தைகளைப் பெற்றெடுத்த பின், அவர்களில் ஒருவரான கபிலதேவர்.. அவர் வளர்ந்த பின் அவரும் இவ்வாறு கூறினார்," என் அன்பு அம்மா! என் தந்தை வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். நானும் வீட்டை விட்டுச் சென்றுவிடுவேன். நீங்கள் என்னிடமிருந்து ஏதேனும் உபதேசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நான் சென்றுவிடுவேன்”. ஆக, அவர் கிளம்பும் முன் தன் தாயாருக்கு உபதேசம் அருளுகிறார். இப்போது, இந்த தேவாஹூதியின் நிலைமை ஒரு சிறந்த பெண்ணினுடையது. அவளுக்கு நல்ல தந்தை கிடைத்தார். நல்ல கணவன் கிடைத்தார். சிறந்த ஒரு மகனும் பிறந்தான். எனவே பெண்களின் வாழ்வில் மூன்று நிலைகள் உண்டு. ஆண்களுக்கு பத்து நிலைகள் உள்ளன. இந்த மூன்று நிலைகளின் பொருள் என்னவென்றால், சிறு வயதில் அவள் தன் தந்தையின் பாதுகாப்பின் கீழ் வாழ வேண்டும். தேவாஹூதியைப் போலவே! அவள் வளர்ந்த பின் இளம் வயதில், "நான் அந்த கண்ணியவானை , அந்த யோகியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்." என்று தன் தந்தையிடம் முன்மொழிந்தார். அவள் தந்தையும் அதை ஏற்றுக் கொண்டார். எனவே, திருமணம் ஆகும் வரை தன் தந்தையின் பாதுகாப்பின் கீழ் இருந்தாள். மேலும் திருமணம் ஆன பின், யோகியான தன் கணவருடன் இருந்தாள். அவள் இளவரசியாக, அரசரின் மகளாக இருந்ததால் பல வகையிலும் கஷ்டங்களுக்கு உள்ளானாள். இந்த யோகி, அவர் ஒரு குடிசையில் வசித்தார். உணவில்லை, தங்குமிடமில்லை, எதுவும் இல்லை. எனவே அவள் துன்பப்பட நேர்ந்தது. அவள் ஒருபோதும் இவ்வாறு கூறவில்லை "நான் அரசரின் மகள். நான் ஆடம்பரமாக வளர்க்கப் பட்டவள். ஆனால் என் கணவரால் ஒரு நல்ல வீடோ அல்லது உணவோ தர இயலவில்லை. அவனை விவாகரத்து செய்ய வேண்டும்.” அவ்வாறு அவள் நினைக்கவில்லை. அது சரியான நிலைப்பாடல்ல. "என்ன ஆனாலும், அவர் என் கணவர். அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு கண்ணியவானைக் கணவராக ஏற்றுக் கொண்டதால், அவரது வசதிகளை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை" இது தான் பெண்ணின் கடமை. அது வேதம் சொல்லும் பாடம். இப்போதெல்லாம், ஒரு சிறிய முரண்பாடு அல்லது கருத்து வேறுபாடு என்றாலே விவாகரத்து என்றாகிவிட்டது. வேறொரு கணவரைக் கண்டுபிடிக்கப் போய்விடுகிறார்கள். ஆனால் அவளோ நிலையாக இருந்தாள். பின் அவளுக்கு மிக நல்ல குழந்தை கிடைத்தது. முழுமுதற் கடவுளின் அம்சமான கபிலர் பிறந்தார். எனவே இவை தான் மூன்று நிலைகள். ஒரு பெண் இவற்றைத் தான் இலக்காகக் கொள்ள வேண்டும். முதலில், அவரது (அவளது) கர்மாவைப் பொருத்தே தகுந்த தந்தையின் நிழல் கிடைக்கிறது. பின்னர் தக்க கணவரிடம், பிறகு கபிலதேவரைப் போல ஒரு நல்ல குழந்தையை ஈன்றெடுக்கிறாள்.